Pages

Anesthesia and Normal Labor: சுக பிரசவத்திலும் மயக்கவியலின் பங்கு

நம் உடலை தாக்கும் ஒவ்வொரு நோய்க்கும், அந்நோயை குணப்படுத்தும் வல்லமை மிக்க டாக்டர்கள் உள்ளனர். இவர்கள் குறிப்பிட்ட ஒரு நோயை குணப்படுத்துவதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள். சில நோய்கள் மற்றும் பாதிப்புகளுக்கு, அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை இருப்பின், டாக்டர்களுக்கு மிகமிக முக்கிய பங்காற்றுபவர்கள், மயக்கவியல் நிபுணர்கள்.
அறுவை சிகிச்சை தேவைப்படும் நபருக்கு, முதலில் மயக்க மருந்து கொடுக்க வேண்டும். மயக்க மருந்து கொடுத்த பின், ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குப் பின் அறுவை சிகிச்சையை துவக்கி, குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்க வேண்டியது அவசியம்.

உடல்நிலை பரிசோதனை
அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிக்கு, உடனடியாக மயக்க மருந்து செலுத்துவது ஆபத்தில் முடியும். நோயாளியை மயக்கமடைய செய்வதற்கு முன், அவர் உடல்நிலையை பரிசோதிப்பது முக்கியம். அவர் உடல் மயக்க மருந்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில் உள்ளதா என்பதை முதலில் அறிந்து, அதன் பின்தான் மயக்க மருந்து செலுத்த வேண்டும்.
ரத்தத்தில், செல், ஹீமோகுளோபின், யூரியா, சர்க்கரை உட்பட அனைத்தும், சிறுநீர், மார்பு எக்ஸ்ரே, ரத்த அழுத்தம், ஈ.சி.ஜி., தேவைப்பட்டால் டிரட்மில் பரிசோதனையும் செய்து, இருதயம் உள்ளிட்டவை சரியாக இயங்குவதை உறுதி செய்வது அவசியம். இந்த நடைமுறையை மயக்கவியல் நிபுணர் தெரிவித்து, அதன் பின் பரிசோதனைகளை செய்வதை விட, அறுவை சிகிச்சை தேவைப்படும் நபருக்கு, அறுவை சிகிச்சைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே இப்பரிசோதனைகளை மேற்கொண்டு, அதன் அறிக்கையை தயாராக வைத்திருப்பது, மருத்துவமனைகளின் முக்கியப் பணி.
இந்த பரிசோதனைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாததால், நோயாளிகள் மற்றும் உறவினர்கள், "பணம் செலவாகுமே...' என்று, இவற்றை தவிர்க்க முயல்கின்றனர்.
நோயாளி மயக்க நிலையில் இருக்கும் போது ஏற்படும் உயிரிழப்பு மற்றும் பக்க விளைவுகளை தவிர்க்க, இப்பரிசோதனைகள் மிகமிக அவசியம். இருந்தாலும், உயிருக்கு போராடும் நோயாளிக்கு செய்யப்படும் அறுவை சிகிச்சைக்கு இந்த பரிசோதனைகள் செய்வதில்லை; அனுபவம் வாய்ந்த மயக்கவியல் நிபுணர் மூலம், அந்நோயாளிக்கு தேவையான மயக்க மருந்து செலுத்தி, சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

சிகிச்சை முறை
அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நபரை, முழு மயக்க நிலைக்கு கொண்டு சென்று, மூச்சுக்குழாய் வழியாக டியூப் மூலம் ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு செலுத்தப்படுகிறது. ஆக்ஸிஜன், நோயாளியின் சுவாசத்துக்காகவும், நைட்ரஸ் ஆக்சைடு மூளை மற்றும் திசுக்களை கட்டுப்படுத்தும் பணியையும் செய்கின்றன.
அறுவை சிகிச்சை முடிந்தவுடன் சில மருந்துகளை நோயாளிக்கு செலுத்தி, மயக்க நிலையை சிறிது சிறிதாக எடுக்க வேண்டும். நோயாளிக்கு நினைவு திரும்பியவுடன் தனி அறையில் அல்லது அவசர சிகிச்சைப் பிரிவில், போதிய மருத்துவப் பாதுகாப்புடன் சில மணி நேரம் வைத்திருக்க வேண்டும்.
உடல் ரீதியான எவ்வித பிரச்னையும் ஏற்படவில்லை, ஏற்பட வாய்ப்பில்லை என்பதை உறுதிசெய்த பின், நோயாளிக்கு ஒதுக்கப்பட்ட அறையில் அனுமதிக்கப்படுவார். மயக்க நிலைக்கு கொண்டு செல்ல செலுத்தப்படும் மருந்தின் அளவு அதிகமானாலோ அல்லது குறைந்தாலோ நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
குறிப்பிட்ட பகுதி முழு மயக்க நிலை இல்லாமல், ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் செயலிழக்கச் செய்யலாம். குறிப்பாக, வயிற்றுக்கீழ் பகுதி முழுவதையும் செயலிழக்கச் செய்து, அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம்.
இதுபோன்ற சிகிச்சையின் போது, முதுகு தண்டில் மயக்க மருந்து செலுத்தப்படுகிறது; அறுவை சிகிச்சை செய்யப்படும் நேரத்துக்கு ஏற்ப, சிறிது சிறிதாக மருந்து செலுத்தப்படுகிறது. இதுபோன்ற சிகிச்சை முறையில் வலி குறைவாக இருக்கும்; ஆபத்தும் ஏற்படாது.

உறுப்பு 
இதேபோல், லோக்கல் அனஸ்தீசியா முறையும் உள்ளது. இதில், ஒரு உறுப்பை மட்டும் செயலிழக்கச் செய்து அந்த உறுப்பில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம். அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நபர், ஏற்கனவே ஏதாவது நோய் பாதிப்புக்காக மருந்து, மாத்திரைகளை தொடர்ந்து உட்கொண்டு வருபவராக இருந்தால், அவற்றை அறுவை சிகிச்சை செய்யும் நாள் வரை தொடர்ந்து உட்கொள்ளலாம்; நிறுத்தக் கூடாது. டாக்டரின் பரிந்துரையின் பேரில், ஒரு சில மாத்திரைகளை மட்டும் தவிர்க்க வேண்டும்.

பிரசவம்
பிரசவம் என்பது, தாயின் மறு பிறப்பு. சுகப்பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சை முறையில் பிரசவம் பார்க்கப்படுகிறது. இதில், சிசேரியன் முறைக்கு மட்டுமே மயக்கவியல் நிபுணர்களின் பங்களிப்பு இருந்து வந்தது.
தற்போது சுகப்பிரசவத்துக்கும் மயக்கவியல் நிபுணரின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில், "பெயின்லஸ் எபிடூரல் டெக்னிக்' முறையில், கர்ப்பிணிகளுக்கு வலியில்லாமல் சுகப்பிரசவம் பார்க்கப்படுகிறது. இந்தியாவிலும் இம்முறையில் பிரசவங்கள் ஒரு சில மருத்துவமனைகளில் நடக்கின்றன. இம்முறையில் கர்ப்பிணியின் முதுகுத்தண்டுவடத்தில் மெல்லிய டியூப் ஒன்றை செருகி, அதன் வழியாக மருந்தை தேவையான அளவு சிறிது சிறிதாக செலுத்தி வந்தால், சுகப்பிரசவத்தின் போது வலி ஏற்படாது.

- இ.எஸ்.ஐ., மருத்துவமனை முன்னாள் மயக்கவியல் துறை நிபுணர் மற்றும் கோவை அரசு மருத்துவமனை ஆர்.எம்.ஓ., டாக்டர் சிவப்பிரகாசம்.

0 வாச‌க‌ர் க‌ருத்துக்க‌ள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...